இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளநிலையில் தற்போது, வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

Update: 2024-09-21 12:00 GMT

கோப்புப்படம்

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்து.

அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.

இதனிடையே காலை 7 மணிக்கு அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயக கடமை ஆற்றினார். இதேபோல் கொழும்புவில் உள்ள பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாக்களித்தார்.

2 மணி நிலவரப்படி, நுவரெலியாவில் 70 சதவீத வாக்குகள் பதிவானது. மொனராகலையில் 65 சதவீத வாக்குகளும் மாத்தறையில் 62 சதவீத வாக்குகளும் பதிவானது. ரத்னபுராவில் 60 சதவீத வாக்குகளும் கொழும்புவில் 60 சதவீத வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இலங்கையின் புதிய அதிபர் யார் என்று நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். அதிபர் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 61 ஆயிரம் போலீசார், 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்