இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- அனுரா குமார திசநாயகே முன்னிலை

முதல் சுற்று முடிவுகள் நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-09-21 17:20 GMT

 கொழும்பு,

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது.அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மக்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கையையொட்டி நாளை காலை 6 மணி வரை இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்று முடிவுகள் நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கே , நமல் ராஜபக்சே, அனுர குமார திசநாயக்க, சஜித் பிரமதேச உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அதிபர் தேர்தலில் களத்தில் உள்ளனர்.

Live Updates
2024-09-21 20:31 GMT
தபால் வாக்குகளில் தொடர்ந்து அனுரா திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். தற்போது வரை எண்ணப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் திசநாயகே முன்னிலை வகிக்கிறார். 
2024-09-21 18:35 GMT

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுள்ளார்.. 

2024-09-21 18:23 GMT


இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில்,  இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். 60.83 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார். 

2024-09-21 18:21 GMT

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். அதேபோல் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் களத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்