பாகிஸ்தானில் கொடூரம்; நிலநடுக்கம் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்: தொழிலாளர் பலி

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு இடையே, பெட்ரோல் நிறுவனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தொழிலாளர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-09-01 12:58 GMT



பலூசிஸ்தான்,



பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதிக்கு உட்பட்ட கலாத் மாவட்டத்தில் ஷேக்ரி என்ற இடத்தில் பாகிஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், அந்த மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரவாதிகளால் வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.

இதில் பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். பலர் காயமடைந்தனர். கலாத் மாவட்டத்தில் ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதனால், மக்கள் வீடுகளை விட்டு அச்சத்தில் வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். எனினும், இதனால் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பயங்கரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் அதிக அளவாக பலூசிஸ்தானில் நடந்த 103 பயங்கரவாத தாக்குதல்களில் 170 பேர் வரை உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்து வரும் கனமழையால் மொத்த உயிரிழப்பு 1,162 ஆக உள்ளது. 3,554 பேர் காயமடைந்தும் உள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான சாலைகள், மின் கோபுரங்கள் மற்றும் பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கடந்த ஜூனில் இருந்து இதுவரை 3.3 கோடி பேர் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்