பறவை காய்ச்சல் எதிரொலி; தென்கொரியாவில் 2.2 கோடி பண்ணை பறவைகள் அழிப்பு

தென்கொரியாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கடந்த 2 மாதங்களில் 2.2 கோடி பண்ணை பறவைகள் அழிக்கப்பட்டு உள்ளன.

Update: 2021-01-25 13:09 GMT
சியோல்,

தென்கொரியா நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பறவை காய்ச்சலும் பரவி வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் 29ந்தேதியில் தென்கொரியாவின் வடக்கு ஜியோல்லா மாகாணத்தில் பண்ணை ஒன்றில் வாத்துகளுக்கு இந்நோய் பரவியது முதன்முறையாக கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் அந்நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் வாரந்தோறும் புதிய பாதிப்புகள் தென்பட தொடங்கின.  இதனால் தென்கொரியாவில் தேசிய அளவிலான பறவை காய்ச்சல் எச்சரிக்கை அளவு தீவிர ஆபத்து நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதுவரை 72 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து 2 மைல்கள் தொலைவிற்குள் அமைந்த பறவைகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, தென்கொரியாவில் கடந்த நவம்பரில் இருந்து இதுவரையில் 2.2 கோடி பண்ணை பறவைகள் அழிக்கப்பட்டு உள்ளன என வேளாண், உணவு மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்