செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்றார்.

Update: 2024-09-07 08:04 GMT

சான் பிரான்சிஸ்கோ,

தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மாதம் அமெரிக்கா சென்றார்.

சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்து சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "சாத்தியமான செயற்கை நுண்ணறிவு (A.I) முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவின் (A.I) மாற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, அந்த தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தைத் தழுவுவோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் சர்வதேச தரத்திலான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அத்துடன் முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரிய லட்சியத்தை கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல்வறு முன்னெடுப்புகள் உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மின்னணுவியல் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் சிறப்பான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தை அரசு தொடங்கி பயிற்சியளித்து வருகிறது

படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் மு.கஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தில் சிகாகோவில் பிஎன்ஒய் மெலன் (BNY MELLON) வங்கியின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த பிஎன்ஒய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டதாகும்.

நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவிலும் பல கிளைகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஎன்ஒய் மெலன் வங்கி தனது 6 முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஒய் மெலன் வங்கியின் துணைத்தலைவர் செந்தில்குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்