பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

பாகிஸ்தானில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-07-24 01:20 GMT
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று உள்ளது.  இதன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியது.

பொதுமக்களை இலக்காக வைத்து நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  25 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  சிகிச்சையை தொடர்ந்து அவர்களது நிலை சீராக உள்ளது.  நள்ளிரவில் திடீரென நடந்த இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.  ஆனால் கடந்த காலங்களில் பலூச் தேசியவாத ஊடுருவல்காரர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளனர்.  நீண்டகால ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய அதிரடி திட்டம் ஆகியவற்றால் குவெட்டா நகரில் தீவிரவாத செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

மேலும் செய்திகள்