கூலிப்படையை ஏவி வாலிபர் வெட்டிக்கொலை: மகளை காதலித்து ஆபாச படம் எடுத்ததால் தந்தை வெறிச்செயல்

புவனேஸ்வரன் திருப்பூரில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

Update: 2024-07-04 02:41 GMT

திருப்பூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் புவனேஸ்வரன் (வயது 25). இவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர் அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை புவனேஸ்வரன் செல்போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். மேலும் அதை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். இதைப் பார்த்த புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசன் அந்த படங்கள், வீடியோவை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் தமிழரசன் அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பியதுடன் அவரிடம் ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன், மாணவியுடனான பழக்கத்தை கைவிடாமல், மீண்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று படம், வீடியோ எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவியின் தந்தை ஆத்திரம் அடைந்து புவனேஸ்வரனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் தமிழரசனை சந்தித்து, புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என்று கூறி உள்ளார். இதற்கு தமிழரசனும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி புவனேஸ்வரனை கொலை செய்வதற்காக தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை தமிழரசன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரனை செல்போனில் தொடர்பு கொண்ட தமிழரசன் மது குடிக்கலாம் என்று கூறி திருமுருகன்பூண்டி பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் தமிழரசன் புவனேஸ்வரனை காரில் ஏற்றிக்கொண்டு காந்திநகரை அடுத்த ஏ.வி.பி. லே அவுட் பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

காரில் இருந்து இறங்கிய புவனேஸ்வரனை, ஏற்கனவே அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரனை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியின் தந்தை கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை, தமிழரசன் மற்றும் கூலிப்படை கும்பல் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசார் அவர்களை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூரில் 14 வயது மாணவியுடன் பழகி, படம், வீடியோ எடுத்த வாலிபரை மாணவியின் தந்தையே கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்