போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு

தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத்தேர்வை 5 ஆயிரம் பேர் எழுதினர்.

Update: 2023-08-26 19:57 GMT

தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத்தேர்வை 5 ஆயிரம் பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு

போலீஸ்துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடத்திற்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் 45 இடங்களில் நேற்று எழுத்துத்தேர்வு தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் தொழில்நுட்பக் கழகம் ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.

இந்த தேர்வுக்கு தஞ்சை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 976 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்ற மெயின் தேர்வில் 5 ஆயிரத்து 141 பேரும், பிற்பகலில் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடைபெற்ற தமிழ் தகுதித்தேர்வில் 5 ஆயிரத்து 743 பேரும் தேர்வு எழுதினர். அதாவது காலையில் 1,101 பேரும், பிற்பகலில் 1,233 பேரும் தேர்வு எழுத வரவில்லை.

செல்போன், கணினி

தேர்வு மையத்திற்குள் செல்போன், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனம் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெல்ட் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 20 தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டன. தேர்வு மையங்களில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் போலீஸ்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தில் 899 ஆண்கள், 201 பெண்கள் என 1,090 பேர் எழுத உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்