தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை - கலெக்டர் விளக்கம்

பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்ணன் என்பவருக்கும், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-09-20 03:42 GMT

கோப்புப்படம் 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு தூத்துக்குடி கலெக்டர் க.இளம்பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம்சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்