முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

திமுக - விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

Update: 2024-09-16 07:00 GMT

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். மேலும் மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை மத்திய அரசு நிறைவேற்ற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:-

அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல்-அமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

அக்டோபர் 2-ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக - விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்ல. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என முதல்-அமைச்சர் தெரிவித்தார். நிர்வாக சிக்கலை கருத்தில்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் எனவும் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்