ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Update: 2024-09-18 12:20 GMT

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதை தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உட்பட 8 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கில் 12-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள இயக்குனர் அமீர் சட்டவிரோதமான பணத்தை கையாண்டதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குற்றப்பத்திரிகையில் உள்ள நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக இந்த வழக்கில் இயக்குனர் அமீர் அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகி, தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்