வாளறமாணிக்கத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

வாளறமாணிக்கத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

Update: 2023-03-06 20:22 GMT

அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் வாளறமாணிக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவில் அருகே உள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10 காளைகள் களம் கண்டன. மாடுபிடி வீரர்கள் பல்வேறு அணிகளாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்குவதற்கும் 9 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு காளைகளையும் அடக்குவதற்கு 25 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 25 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 9 மாடுகள் பிடிபட்டது. ஒரு மாடு பிடிபடவில்லை. மாடுகள் முட்டியதில் 5 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெற்றி பெற்ற வீரர் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு ரூ.5001 ரொக்கப்பரிசு மற்றும் 3 வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்