நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ராமேஸ்வரம் கோயிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்..!
ராமேஸ்வரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் கோயில் சன்னதி பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
ராமேஸ்வரம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் ராமநாதசாமி கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் முழுவதும் மழை நீர் குளம் போல் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மழை நீரில் இறங்கி கஷ்டப்பட்டு நடந்தபடியே தரிசனம் செய்ய சென்றனர். மழைநீர் செல்லும் பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் செல்ல வழி இல்லாமல் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.