விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை

தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-03 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50) விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, தனது பேத்தியை விளையாட விடுவதற்காக பக்கத்து தெருவுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் பேத்தியுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகா உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. அதில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். விவசாயி முத்துசாமியின் மருமகன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்