சாலைகளை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்

சிவகங்கை நகரில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் மற்றும் பழைய இரும்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

Update: 2022-07-05 18:52 GMT

சிவகங்கை நகரில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் மற்றும் பழைய இரும்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிவகங்கை நகர் ரெயில் நிலையம் சாலை, உழவர் சந்தை பகுதி ஆகிய இடங்களில் அனுமதி பெறாமல் ஏராளமான மீன் கடைகள் நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து நகரசபை தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் பாஸ்கரன், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், நகர் அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புரவு அலுவலர் முத்து கணேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ராமதாஸ், கீதா கார்த்தி, வீனஸ் ராமநாதன் மற்றும் நகரசபை ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அபராதம் விதிப்பு

சிவகங்கையில் நகரசபை இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் மற்றும் காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினார்கள். இதேபோல சிவகங்கை நகர் வ.உ.சி. தெருவில் ஆக்கிரமித்திருந்த பழைய இரும்பு கடை அகற்றப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சிவன் கோவில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு கடையை அதிகாரிகள் அகற்றினார்கள். அத்துடன் அவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக நகரசபை தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது:-

சிவகங்கை நகரில் உள்ள நகராட்சி சாலைகளை ஆக்கிரப்பு செய்து கடைகள் மற்றும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற நகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் பாதைகளை மறைத்து கடைகள் அமைத்து இருந்தாலும் அவைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்