செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குடியாத்தம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு
குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணிகள் நிறுத்தம்
அவர்களிடம் இந்தப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என அப்பகுதி பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.