'அரசியல் மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் வேண்டும்' - விஜய்யின் கருத்துக்கு அண்ணாமலை பதில்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-06-30 16:48 GMT

கோவை,

கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் தேவை என்று நடிகர் விஜய் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் தேவை என்பது என்னுடைய கருத்து இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஒரு முதல்-அமைச்சரால் எதுவும் செய்ய முடியாது. அதேபோல் ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி. ஒரு பஞ்சாயத்து தலைவரால் எதுவும் செய்துவிட முடியாது. அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது கூட்டு முயற்சி.

படித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு போட்டி போட வேண்டும். அவர்களின் ஊர்களிலும், கிராமங்களிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதைத் தொடர்ந்து கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் எல்லோரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஒரு முதல்-அமைச்சர் நல்லவராக இருந்தாலும், சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அயோக்கியர்களாக இருந்தால் மாற்றம் நடக்காது. எனவே, தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் வேண்டும் என்பது எங்களுடைய கருத்து."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்