பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

Update: 2023-04-02 23:50 GMT

சென்னை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் மொழிப்பாடங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தநிலையில், தேர்வை எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை துணைத்தேர்வில் பங்கேற்கவைக்க கல்வித்துறை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்றுடன் நிறைவு

இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற இருக்கிறது. பொதுத்தேர்வின் கடைசி நாளான இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை எழுத இருக்கின்றனர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு...

இதேபோல் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுதினம் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 88 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்கள் 5 ஆயிரத்து 300 பேரும் எழுதுகின்றனர். நாளை மறுதினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்பட 9 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி (வியாழக் கிழமை) வரை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்