சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சதுரகிரியில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-21 19:56 GMT

வத்திராயிருப்பு, 

சதுரகிரியில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தரிசிக்க செல்வதற்காக நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றனர். முன்னதாக தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள பேச்சியமமன், கருப்பசாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பலர் வழுக்குப்பாறையில் நீராடி விட்டு சதுரகிரியை நோக்கி நடந்து சென்றனர். பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பாதுகாப்பு பணி

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீரோடை பகுதியில் தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் மதுரை மாவட்ட சாப்டூர் போலீசார், விருதுநகர் மாவட்ட வத்திராயிருப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் விருதுநகர், வத்திராயிருப்பு, மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்