பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்த போலீஸ் ஏட்டு திடீர் சாவு

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்தபோது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-09-18 14:21 GMT

போலீஸ் ஏட்டு

புதுச்சேரி பீட்டர் நகர் சாரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 48). இவர், புதுச்சேரியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர்.

ஹரிகரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த 15-ந்தேதி அவர் குடும்பத்துடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள சுற்றுலா இடங்களை அவர் குடும்பத்துடன் கண்டுகளித்தார்.

பின்னர் அவர்கள், அங்கிருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு நேற்று வந்தனர். அங்கு அறை எடுத்து தங்கி சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.

மயங்கி விழுந்து சாவு

இந்தநிலையில் இன்று காலை கும்பக்கரை அருவிக்கு ஹரிகரன், தனது குடும்பத்தினருடன் சென்றார். அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில், அனைவரும் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஹரிகரன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டா்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு ஹரிகரன் இறந்திருப்பது தெரியவந்தது. சுற்றுலா வந்த இடத்தில், போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்