திருவிடைமருதூர் அருகே தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!

திருவிடைமருதூர் அருகே தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-05 13:24 GMT

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 50). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி(38). இவர்களுக்கு லோகேஷ் என்ற மகனும், யோகிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் ராணியின் தாயார் மீனாட்சி(65) என்பவர் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார்.

கணவன் அன்பழகன் தனது மனைவியிடம் உனது தாயை ஊருக்கு அனுப்பிவை என்று வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனமுடைந்த அன்பழகனின் மனைவி ராணி, மாமியார் மீனாட்சி இருவரும் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் தாய்-மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்