கும்பகோணத்தில் ஜமாபந்தி தொடங்கியது

கும்பகோணத்தில் ஜமாபந்தி தொடங்கியது

Update: 2022-06-23 19:51 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

ஜமாபந்தி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வருவாய் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 2022-ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கையான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தியில் கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி பகுதிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு தஞ்சை முத்திரை கட்டண உதவி ஆணையர் அய்வண்ணன் தலைமை தாங்கினார்.

7 மனுக்களுக்கு உடனடி தீர்வு

கும்பகோணம் தாசில்தார் தங்க பிரபாகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி மொத்தம் 116 மனுக்கள் பெறப்பட்டு 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் அனைத்தும் துறை ரீதியான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) முருக்கங்குடி கிராமத்திலும், வருகிற 28-ந் தேதி நாச்சியார்கோவிலிலும், 29-ந்தேதி சோழன் மாளிகையிலும், 30-ந் தேதி கும்பகோணம் பகுதியிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்