காதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Update: 2023-08-09 19:45 GMT

அரூர்

அரூர் அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10- ம் வகுப்பு படித்து வந்தார். தொழிலாளர்களான இவருடைய பெற்றோர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி அரூர் அருகே உள்ள கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வினோத் (22) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமி தனியாக இருந்தபோது அவரை சந்தித்த வினோத் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின் மீண்டும் சில முறை சிறுமியை தனிமையில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

3 மாதம் கர்ப்பம்

இந்த நிலையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தின் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் சிறுமியை பவானி அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று குழந்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தபோது அந்த சிறுமிக்கு 15 வயதே ஆவது தெரிய வந்தது.

இது குறித்து செவிலியர்கள் அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் போலீசார் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வாலிபர் வினோத் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்