அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்,மனைவி பலி - போலீஸ் விசாரணை

மேல்பனையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்,மனைவி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-12 09:33 GMT

ராமநாதபுரம் ,

ராமநாதபுரம் மாவட்டம், மங்கலக்குடி அருகே உள்ள பாசானி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 50).கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி(45).இவர்கள் இருவரும் பாசானி கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

இறந்த அண்ணாதுரை தம்பதிக்கு 12 வயதில் மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை தாசில்தார் செந்தில் வேல் முருகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்