சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-09-12 17:59 GMT

மாநாடு

பெரம்பலூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட 7-வது மாநாடு நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் வேலை அறிக்கையை செயலாளர் செல்லதுரை வாசித்தார்.

சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் சின்னசாமி தாக்கல் செய்தார். மாநில செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.

அரசே கொள்முதல்....

சின்ன வெங்காயத்திற்கு குறைந்த பட்ச விலையாக ரூ.30 ஆக தீர்மானித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஜவுளி பூங்கா, அரசு மருத்துவக்கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகியவை அமைக்க வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். தோட்டக்கலைத்துறை மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கிட வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரமாகவும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.

ஊர்வலம்

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் வருகிற 17, 18, 19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து மாநாடு நடைபெற்ற இடத்திற்கு விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்