சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-31 16:59 GMT

மானாமதுரை,

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆடித் தபசு உற்சவத்தை முன்னிட்டு அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. கொடிமரம் அருகே அலங்காரத்துடன் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

வீதி உலா

விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, விருஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு, சப்பரம் ஆகியவற்றிலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்