துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் - வைரமுத்து வாழ்த்து

துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-29 03:13 GMT

சென்னை,

துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின், இணை முதல்-அமைச்சராய் வளர வாழ்த்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன். இந்த உயர்வு பிறப்பால் வந்தது என்பதில் கொஞ்சம் உண்மையும், உங்கள் உழைப்பால் வந்தது என்பதில் நிறைய உண்மையும் இருக்கிறது.

பதவி உறுதிமொழி ஏற்கும் இந்தப் பொன்வேளையில், காலம் உங்களுக்கு மூன்று பெரும் பேறுகளை வழங்கியிருக்கிறது. முதலாவது உங்கள் இளமை. இரண்டாவது உங்கள் ஒவ்வோர் அசைவையும் நெறிப்படுத்தும் தலைமை. மூன்றாவது உச்சத்தில் இருக்கும் உங்கள் ஆட்சியின் பெருமை.

இந்த மூன்று நேர்மறைகளும் எதிர்மறை ஆகிவிடாமல் காத்துக்கொள்ளும் வல்லமை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. உங்கள் ஒவ்வோர் நகர்வும் மக்களை முன்னிறுத்தியே என்பதை மக்கள் உணரச் செய்வதே உங்கள் எதிர்காலம்.

என் பாடலைப் பாடிய ஒரு கலைஞன் துணை முதல்-அமைச்சராவதை எண்ணி என் தமிழ் காரணத்தோடு கர்வம் கொள்கிறது. கலைஞர் வழிகாட்டுவார். துணை முதல்-அமைச்சராகும் நீங்கள் இணை முதல்-அமைச்சராய் வளர வாழ்த்துகிறேன்."

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்