கந்துவட்டி கொடுமை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு

கந்துவட்டி கேட்டு கொடுமை செய்ததாக தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-24 14:26 GMT

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் ராணி (வயது 42). இவர், அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் (45), அவருடைய மனைவி மகராசி (43) ஆகியோரிடம் பல தவணையாக ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதற்கு ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் வட்டியாக கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கொண்டு ராணி வட்டி கட்ட முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று வட்டியும், அசலும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் ராணி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில், ஜெயக்குமார், மகராசி உள்பட 4 பேர் மீது கந்துவட்டி தடுப்பு சட்டம் உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்