வீட்டின் பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணம் திருட்டு

கோவையில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்

Update: 2023-06-14 18:45 GMT

பீளமேடு

கோவையில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து 29 பவுன் நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவுவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை பீளமேடு சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 41). தனியார் நிறுவன ஊழியர். தமிழ்செல்வன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில், மதியம் பக்கத்து தெருவில் வசிக்கும் தமிழ்செல்வனின் தாய் ராஜாமணி தனது மகன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே இதுகுறித்து தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 29 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதையடுத்து தமிழ்செல்வன் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சந்தேகத்திற்கிடமான நபரின் கைரேகை சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீளமேடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சமீப நாட்களாக செயின் பறிப்பு, வீடு புகுந்து நகை திருடுவது அதிகரித்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்