வாகனம் மோதி 2 வாலிபர்கள் சாவு

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2022-11-23 18:45 GMT

திருப்புத்தூர், 

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

வாகனம் மோதியது

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள செம்பூர் கிராமத்தை சேர்ந்த சிவபெருமாள் மகன் சரவணன் (வயது 21). இவர் சிராவயல் அருகே தென்கரையில் உள்ள அரசு மதுபான கடை பாரில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பரான சிராவயலை சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் கோகுல்நாத் (21). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

ஜெயமங்கலம் பெரிய பாலம் அருகில் வந்தபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோகுல்நாத் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுல்நாத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கோகுல்நாத்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்