அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Update: 2024-09-09 17:51 GMT

மதுரை,

மதுரையில் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தினை சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடத்தினோம். இந்தக் கூட்டத்தின் போது, மதுரையில் நடைபெற்று வருகிற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்களின் பணிகள் தொடர்பாக, ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு ஆய்வு செய்தோம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய அரசுத் திட்டங்கள் பொதுமக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படுகிறதா? அதுகுறித்த பயனாளிகளின் கருத்துக்கள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினோம். மேலும், கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை, இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வெற்றி போன்றவை குறித்து அதிகாரிகள் - அலுவலர்கள் இக்கூட்டத்தின் வாயிலாக எடுத்துரைத்தனர்.

'கோட்டையில் தீட்டப்படும் திட்டங்கள் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடையும் வகையிலும், பயனாளிகள் எண்ணிக்கை இலக்கை எட்டும் வண்ணமும் செயலாற்ற வேண்டும்' என்று ஆலோசனைகளை வழங்கினோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Tags:    

மேலும் செய்திகள்