இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது

காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-09-17 03:08 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இலங்கை பைப்பர் படகையும் அதிலிருந்த மூன்று இலங்கை மீனவர்களையும் விரட்டிப் பிடித்து கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், மண்டபம் முகாமிற்கு அவர்களை அழைத்து சென்றனர். இதற்கிடையே நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து மீனவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக தகவல் கொடுத்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து மண்டப்பத்திலுள்ள இந்திய கடலோர காவல் படை முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவில்தான், மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா அல்லது காற்றின் திசையில் அறியாமல் வந்தனரா என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்