பங்குச்சந்தையில் முதலீடு: தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.90 லட்சம் மோசடி

தொழில் அதிபர் மனைவி இணையதளத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார்.

Update: 2024-09-17 03:49 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் 47 வயதுடைய மனைவி இணையதளத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார். அப்போது வந்த ஒரு லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார். அந்த லிங்க் மூலம் அவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்துள்ளார். இதையடுத்து அந்த குரூப்பில் மர்ம நபர்கள் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான தகவல்களை பரப்பி உள்ளனர்.

அதன்படி ஒரு குறுந்தகவலில் குறிப்பிட்ட இணையதளத்துக்குள் சென்று முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தனர். இதை நம்பிய அந்தப் பெண் அந்த இணையதளத்துக்குள் சென்று பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார். தன்னிடம் போதிய பணம் இல்லாததால் கணவரின் வங்கிக் கணக்கில் இருந்து, அவருக்குத் தெரியாமலே பணத்தை எடுத்து முதலீடு செய்ததாக தெரிகிறது.

அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பல தவணைகளில் ரூ.90 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். பின்னர் தான் முதலீடு செய்த பணத்தை அவர் எடுக்க முயன்றார். ஆனால் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து மர்மநபர்கள் கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்