25 மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

தூத்துக்குடியில் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்து 25 மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Update: 2023-02-04 18:45 GMT

தூத்துக்குடியில் பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்து 25 மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு

பூம்புகார் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் ஐதராபாத் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கத்துக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி தலைமை தாங்கினார். ஆராய்ச்சி நிறுவன அலுவலர் முபாரக் அலி வரவேற்று பேசினார். அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தலைவர் எஸ்.வேல்விழி, இந்திய தேசிய கடல் தகவல் சேவை மைய விஞ்ஞானி விக்னேஷ், மீன்வள பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு தலைவர் வினோத்குமார், தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், இந்திய தேசிய கடல் தகவல் மைய தொழில் நுட்ப அலுவலர் தினேஷ் ஆகியோர் பேசினர்.

பவளப்பாறைகளின் முக்கியத்துவம்

கருத்தரங்கில் மீனவர்களின் இன்றைய நிலைப்பாடு, பவளப்பாறைகளின் அழிவுக்கான காரணங்கள், பவளப்பாறைகளின் அவசியம், செயற்கை பவளப்பாறைகளின் முக்கியத்துவம், சுனாமி குறித்து முன்னெச்சரிக்கை தகவல்களை அளித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டன.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேம்பார் முதல் பெரியதாழை வரை உள்ள 25 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பெண்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் ஆராய்ச்சி நிறுவன அலுவலர் கே.வி.குமார் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்