வன்முறை வெடித்தது! அடித்து நொறுக்கப்பட்டது பாஜக அலுவலகம்!

பீகாரில் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இளைஞா்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-16 18:01 GMT

பாட்னா,

இந்திய ராணுவத்தில் அக்னி வீா் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள். இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள். 4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 25 சதவீதம் போ் மட்டுமே வழக்கமான பணியில் சேர முடியும் என கூறி பீகாாில் இளைஞா்கள் போராட்டம் நடத்தினா். நெடுஞ்சாலையில் டயா்களை கொளுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

பீகாரில் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தநிலையில், இன்றும் 2-வது நாளாக அங்கு போராட்டம் நீடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் பாட்னா, முசாபர்பூர், பக்கர், ஜெகனாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், ரெயில் நிலையங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர். பாபுவா ரோடு ரெயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசினார்கள். அதோடு ரெயிலின் ஒரு பெட்டியிலும் தீ வைத்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பல இடங்களில் போலீசார் மீது இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தினர். இந்த வன்முறை காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்