கேள்வி நேரமின்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் - புதிய கட்டிடத்தில் நடைபெறும்?

கேள்வி நேரமின்றி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 00:56 GMT

புதுடெல்லி,

இந்த மாதம் 18-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஆனால் இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த தொடரின் தற்காலிக நிகழ்ச்சிநிரல் தொடர்பாக தனியே தெரிவிக்கப்படும் என்று இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

கேள்வி நேரமின்றி நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடர், புது நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதால், நடப்பு மக்களவையின் கடைசி கூட்டத்தொடராக இந்த சிறப்பு கூட்டத்தொடர் இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

எம்.பி.க்களின் குழு புகைப்படம் எடுக்க செய்யப்பட்ட ஏற்பாடும், இந்த கருத்துக்கு எண்ணெய் வார்த்துள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கூட்டத்தொடர் மாறுவதால் குழு புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தகவல் உலா வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்