ஒரே நாளில் 5 தொகுதிகள்.. தெலுங்கானாவை குறிவைத்த ராகுல் காந்தி..!

வாரங்கல் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

Update: 2023-11-16 08:08 GMT

கோப்புப்படம்

ஐதராபாத்,

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும், வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை தெலுங்கானா வருகிறார்.

ஒரே நாளில் 5 தொகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் மற்றும் வாகன பிரசாரங்களில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரசாரத்திற்காக விமானம் மூலம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பினபாக்காவை சென்றடைகிறார். அங்கு அவர் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பேசுவார். அங்கிருந்து நர்சம்பேட்டைக்கு செல்லும் அவர் அங்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

இதுதவிர வாரங்கல் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் அவர் பாத யாத்திரை மேற்கொள்கிறார். பின்னர், சாலை மார்க்கமாக ஐதராபாத் வந்து, ராஜேந்திரநகரில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவார் என்றும், அங்கிருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்