பஞ்சாப் மந்திரியை நீக்கக்கோரி சட்டசபையில் காங்கிரஸ் அமளி

ஒப்பந்ததாரர்களிடம் பணம் பறிப்பது பற்றி ஆலோசனை நடத்திய பஞ்சாப் மந்திரியை நீக்கக்கோரி சட்டசபையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.

Update: 2022-09-29 21:15 GMT

கோப்புப்படம்

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அதில், உணவு பதப்படுத்துதல் துறை மந்திரியாக இருப்பவர் பவுஜாசிங் சராரி.

இவர் தனக்கு நெருக்கமான ஒருவருடன் ஆலோசிக்கும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. உணவு தானிய போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை பிடித்து பணம் பறிப்பது பற்றி அவர் ஆலோசனை நடத்துவது இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், நேற்று பஞ்சாப் சட்டசபை கூட்டம், அமளியுடன் தொடங்கியது. சராரியை பதவி நீக்கம் செய்யுமாறு எதிர்க்கட்சி தலைவர் பிரதாப்சிங் பஜ்வா வலியுறுத்தினார். ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்புமாறும், சராரி மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சபையின் மையப்பகுதிக்கு சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்