மணிப்பூர் கவர்னர் தலைமையில் அமைதிக் குழு - மத்திய அரசு அறிவிப்பு

இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Update: 2023-06-10 14:30 GMT

இம்பால்,

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில கவர்னர் அனுசுயா உய்கி தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, மத்திய அரசு சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் இது குறித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.இந்தக் குழுவில், மாநில முதல்மந்திரி , சில மந்திரிகள் , எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்