காஷ்மீரில் ஆசிரியை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: பண்டிட்கள் ஆர்ப்பாட்டம் - தொடரும் பதற்றம்

காஷ்மீரில் இந்து பண்டிட் சமூக ஆசிரியை ஒருவர் நேற்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Update: 2022-05-31 21:54 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீர் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஜ்னி பாலா (வயது 36). இவர் குல்காம் மாவட்டம் கோபால்போராவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

நேற்று அங்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள், ஆசிரியை ரஜ்னி பாலா மீது சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியை, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு பயங்கரவாதிகளை தேடும் வேட்டையை நடத்தினர்.

மே மாதத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 2-வது நபர் ரஜ்னி பாலா ஆவார். கடந்த மாதம் 12-ந் தேதி, பட்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.

சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டுக் கொன்று வருகின்றனர். கடந்த 25-ந் தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த மாதத்தில் மட்டும் 7 பேர் இவ்வாறு பயங்கரவாதிகளின் இலக்குக்கு பலியாகி இருக்கின்றனர்.

ஆசிரியை ரஜ்னி பாலா கொல்லப்பட்டதற்கு தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் இழிவான செயல் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஆசிரியை கொலைக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் பெண்கள் உள்பட பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மத்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பண்டிட் சமூகத்தின் ராகுல் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டபோதும் அந்த சமூக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில் அவந்திப்புரா ராஜ்போரா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஒரு பெண், ஓர் அரசு ஊழியர் கொல்லப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்