நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை இணையதள குற்றவாளிகள் 26 பேர் கைது
நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. மாநில போலீசுடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டது.
புதுடெல்லி,
இணையதளத்தை பயன்படுத்தி இந்தியாவில் நிதிமோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச இணையதள குற்றவாளிகளின் (சைபர் கிரைம்) கட்டமைப்பை தகர்த்தெறிய 'ஆபரேஷன் சக்ரா' என்ற அதிரடி வேட்டையை சி.பி.ஐ. நடத்தி வருகிறது.
இன்டர்போல், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., ஆஸ்திரேலிய, கனடா போலீசார் ஆகியோர் அளித்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. மாநில போலீசுடன் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டது.
இதில், இணையதள குற்றவாளிகள் 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேரை கர்நாடக போலீசும், 7 பேரை டெல்லி போலீசும், 2 பேரை பஞ்சாப் போலீசும், ஒருவரை அந்தமான் போலீசும் கைது செய்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது.