தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-26 10:23 GMT

புதுடெல்லி,

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தை 26-ந்தேதி(இன்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வாடும் பயிர்களை கருத்தில் கொண்டு நீரின் அளவை குறைக்காமல், அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. தண்ணீரை உரிய நேரத்தில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

அதே சமயம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிப்பதாக கர்நாடக அரசு வாதிட்டது. காவிரியில் இருந்து இதற்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்