ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் வன்முறைக்கு 5 பேர் பலி: வன்முறை பாதித்த பகுதிகளை மேற்கு வங்காள கவர்னர் பார்த்தார்

மேற்கு வங்காள ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில கவர்னர் பார்வையிட்டார். அரசியல் மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

Update: 2023-06-16 18:16 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஊராட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 15-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களை ேவட்புமனு தாக்கல் செய்ய விடாமல், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுப்பதாக புகார் எழுந்தது. 15-ந் தேதி, தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் பங்கோரில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அதில், 2 பேர் பலியானார்கள். மேலும் சிலர் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால், சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் சோப்ரா உள்ளிட்ட இடங்களில் நடந்த மோதல்களில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டம் பங்கோரில் உள்ள பிஜோய்கஞ்ச் மார்க்கெட்டுக்கு சென்றார்.

அங்கு வசிக்கும் மக்களுடன் உரையாடினார். மாவட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் பேசி, விவரம் கேட்டறிந்தார்.

பின்னர், கவர்னர் ஆனந்தபோஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டன. எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த அரசியல் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

இதுகுறித்து நான் ஏற்கனவே முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தினேன். அவரும் அரசியல் சாசன பதவி வகிப்பவர் என்பதால், அவருடன் பேசியதை வெளியில் சொல்ல முடியாது.

அரசியல் சட்டப்படி, ஒரு கவர்னரிடம் என்ன எதிர்பார்க்க முடியுமோ, அதை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்