மகனை உயிருடன் எரித்து கொன்ற மூதாட்டி

பெங்களூரு சோழதேவனஹள்ளியில் குடிபோதையில் தகராறு செய்ததால் மகனை உயிருடன் எரித்து கொன்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-19 16:33 GMT

சோழதேவனஹள்ளி:-

குடிபோதையில் தகராறு

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கபானவாராவில் வசித்து வருபவர் சோபியா பீ(வயது 61). இவரது மகன் சாந்த் பாஷா(40). இவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக சாந்த் பாஷாவுடன் வாழ பிடிக்காமல் அவரது மனைவி, பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் சோபியா பீ தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். தினமும் மதுஅருந்தி விட்டு குடிபோதையில் தாய் சோபியா பீவுடன் சாந்த் பாஷா சண்டை போட்டு வந்தார். அதுபோல், நேற்று முன்தினம் மதியமும் அவர் குடிபோதையில் தாயுடன் தகராறு செய்துள்ளார்.

மகன் எரித்து கொலை

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சோபியா பீ சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து மகன் சாந்த் பாஷா மீது ஊற்றி தீவைத்திருக்கிறார். இதில், அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி சாந்த் பாஷா இறந்து போனார். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சோழதேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சோபியா பீயை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் தன்னுடன் சண்டை போட்டதுடன், தன்னை தாக்கியால் மகனை தானே எரித்து கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் சோபியா பீ தெரிவித்தார். கைதான சோபியா பீ மீது சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு செய்த மகனை மூதாட்டி எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்