திரிணாமுல் காங். நிர்வாகி மகன் பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? - மம்தா சர்ச்சை கருத்து

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

Update: 2022-04-12 14:24 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21 வயது)

இதற்கிடையில், சமரிந்திர கயாலின் மகன் பராஜ்கோபால் கடந்த 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். அந்த பிறந்தநாள் விழாவில் அதேகிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பங்கேற்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் பங்கேற்றந்த சிறுமி பராஜ்கோபால் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகள் பிறந்தநாள் விழாவில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் விழாவுக்கு பின் இரவு எங்கள் மகளை சிலர் வீட்டில் காரில் வந்து விட்டு சென்றனர். மிகுந்த உடல்வலியால் அவதிப்பட்டு வந்த எங்கள் மகள் அதிக ரத்தப்போக்கு காரணமாக மறுநாள் அதிகாலை வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார். 

இது பற்றி வெளியே கூறினார் வீட்டை எரிந்துவிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான சமரிந்திர கயாலின் மற்றும் அவரது மகன் பராஜ்கோபால் எங்களை மிரட்டினார். 

ஆகையால், அந்த மிரட்டலுக்கு அஞ்சி, தைரியம் இல்லாததால் உயிரிழந்த எங்கள் மகளை அடக்கம் செய்துவிட்டோம்’ என அந்த சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். 

இதற்கிடையில், 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் மேற்குவங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சர்ச்சைக்க்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி நேற்று கூறுகையில், இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா? எப்படி அழைப்பீர்கள் என போலீசாரிடம் நான் கேட்டேன். இது மோசமான சம்பவம். கைது நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இது உண்மையிலேயே பாலியல் வன்கொடுமையா? அல்லது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தாரா? அல்லது இது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? அல்லது அந்த சிறுமி தாக்கப்பட்டாரா? அல்லது சிறுமியின் காதல் விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியுமா? என போலீசாரிடம் கேட்டேன். ஒரு பையனும் பெண்ணும் காதலில் இருந்தார் நான் எப்படி அதை தடுக்க முடியும். 

அந்த சிறுமி 5-ம் தேதி உயிரிழந்துள்ளார். போலீசாருக்கு 10-ம் தேதி தகவல் தெரிந்துள்ளது. ஒருவர் 5-ம் தேதி உயிரிழந்துள்ளபோது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளபோது ஏன் 5-ம் தேதியே போலீசில் புகார் அளிக்கவில்லை. நீங்கள் உடலை எரித்துவிட்டீர்கள். இதில் நிபுணத்துவம் இல்லாத மனிதராக, முழுமையான விவரம் தெரியாத நபராக கேட்கிறேன். போலீசார் எப்படி ஆதாரங்களை பெறுவது?’ என்றார்.

இந்நிலையில், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மகன் பராஜ்கோபால் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்