நாட்டில் ஒரே நாளில் 1,573 பேருக்கு தொற்று: கொரோனா பரவல் சற்றே குறைந்தது

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்.

Update: 2023-03-29 00:09 GMT

புதுடெல்லி,

நாட்டில் நேற்றும் கொரோனா தொற்று பாதிப்பு சற்றே குறைந்தது. நேற்று முன்தினம் 1,805 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று 1,573 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 525 ஆனது.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர். இதுவரை இந்தத் தொற்றின் பிடியில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 703 ஆக உயர்ந்தது.

தொற்றினால் நேற்று நாட்டில் எங்கும் உயிர்ப்பலி இல்லை. இருப்பினும் கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐக் கணக்கில் சேர்த்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 841 ஆக அதிகரித்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 681 உயர்ந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 981 ஆகும்.  

Tags:    

மேலும் செய்திகள்