மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா.


செப்டம்பர் 6, 2024 அன்று, தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது

இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்க இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் சார்பு வேந்தராக இருந்த திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் புதிய வேந்தர் என்ற வகையில் நிறுவனத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். நிறுவன வேந்தர் திரு. A.N. ராதாகிருஷ்ணன் மற்றும் இடைக்கால வேந்தர் திருமதி R. கோமதி அம்மாள் ஆகியோரின் பண்புகளையும், பாரம்பரியத்தையும் கொண்டுள்ள புதிய வேந்தர் வரும் ஆண்டுகளில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உறுதி மொழிந்தார்.

நிறுவன வேந்தரின் தொலைநோக்குப் பார்வையும், வளமான நிர்வாகத் திறமையும் அறிந்த திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இந்த நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி வழிநடத்த உள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் திரு. ஆகாஷ் பிரபாகர் அவர்கள் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பு வேந்தராக பதவி ஏற்றார். ஜே.பி. மோர்கன் சேஸ் & கோ-வின் நிர்வாக இயக்குனர் திரு. பிரபாகர் எட்வர்ட் அவர்கள் இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் திரு. நவீன் ராகேஷ் அவர்களும், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் G.Ra.கோகுல் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து மதிப்புமிகு நிறுவன வேந்தர் திரு.A.N.ராதாகிருஷ்ணன், அவர்களுக்கு பிரமுகர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர். பதிவாளர், பேராசிரியர் டாக்டர். சுரேகா வரலட்சுமி வரவேற்பு உரையை வழங்கினார். துணை வேந்தர், பேராசிரியர் டாக்டர். சி. ஸ்ரீதர் அவரது உரையில் சார்பு வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் இருந்தபோது நிகழ்த்திய சாதனைகளான தேசிய மதிப்பீடு மற்றும் கவுன்சிலால் அங்கீகாரம் பெறுதல் (NAAC), A+ தரத்தில் அங்கீகாரம் பெறுதல், தேசிய நிறுவன தரவுத்தொடர் முறைமை, (NIRF) முறையில் தொடர்ந்து சிறந்த நிலைபேறு பெறுதல், பல்கலைக்கழக மானியக் குழுவின் 12B நிலை பெறுதல் மற்றும் ISO அங்கீகாரம் போன்றவற்றை பட்டியலிட்டு பதவி ஏற்க இருக்கும் புதிய வேந்தரை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிகார மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இடைக்கால வேந்தராக இருந்த திருமதி R. கோமதி அம்மாள் அவர்கள் தன்னிடம் இருந்த செங்கோலை புதிய வேந்தரிடம் வழங்கினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட கௌரவ விருந்தினர் அவர்கள் புதிய வேந்தரின் கொள்கைகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக அவரது உரையில் கூறினார். நிகழ்வின் அடுத்த அங்கமாக திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறையாக கையொப்பமிடுதலைத் தொடர்ந்து, வேந்தராக தனது உரையை வழங்கினார், இவ்வுரையில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதற்கான தனது தொலைநோக்கு பார்வையினை கோடிட்டுக் காட்டினார். மேலும் அவர் உயிர் காக்கும் நலத்திட்டங்களான 80 வயதுக்கு மேல் இருக்கும் முதியோர்களுக்கு மீனாட்சி கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் முற்றிலும் இலவச மருத்துவ சிகிச்சையையும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கும் உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

சார்பு துணை வேந்தராக செயலாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் டாக்டர். சி. கிருத்திகா அவர்கள், நிறுவனத்தின் புதிய சார்பு வேந்தராக பதவியேற்ற. திரு. ஆகாஷ் பிரபாகர் அவர்களை அறிமுகப்படுத்தினார். மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் வேந்தர் மற்றும் மீனாட்சி கல்வி குழுமத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக புதிய சார்பு வேந்தர் அவர்கள் கூறினார்.

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் புதிய வேந்தர் மற்றும் சார்பு வேந்தரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பேராசிரியர் டாக்டர் B.சீனிவாசன் அவர்கள் இவ்விழாவிற்கான நன்றியுரையை வழங்கினார். இந்நிகழ்வு நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.


Next Story