பிரம்மன், குபேரன் வழிபட்ட ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயம்


ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அன்னம்புத்தூர்.

ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது. கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு நோக்கிய சன்னிதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது. கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.

ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

தல வரலாறு

அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.

ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார். இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.

இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார். பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.

ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான். அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது நிதிதான். இந்த சிக்கல்களுக்கு விடை தருபவராக ஸ்ரீநிதீஷ்வரராக எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான்.

வழிபாடும்.. தீர்வும்..

* குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

* கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

* ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

* வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

* மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

* பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi


Next Story