உலக பெண்கள் டென்னிஸ்: பாலா படோசா, மரியா சக்காரி வெற்றி

உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
குவாடலஜரா,
‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறார்கள்.
இதன் 2-வது நாளில் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினைச் சேர்ந்த பாலா படோசா, 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசைச் சேர்ந்த சபலென்காவை எதிர்கொண்டார்.
1 மணி 16 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் படோசா 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சபலென்காவை வெற்றி பெற்றார். 23 வயதான படோசா தொடர்ச்சியாக ருசித்த 10-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றினார்.
Related Tags :
Next Story