உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு நேரடி விண்ணப்பம்


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு நேரடி விண்ணப்பம்
x

கோப்புப்படம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்துள்ளது.

சென்னை,

கனடாவில் நடைபெற்ற பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தமிழக இளம் செஸ் வீரரான குகேஷ் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீன வீரர் டிங் லிரினுடன் இந்த ஆண்டு இறுதியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் குகேஷ் விளையாடவுள்ளார்.

இந்த போட்டியை முதலில் இந்தியாவில் உள்ள டெல்லி, சென்னை, குஜராத்தில் நடத்துவதற்கு கேண்டிடேட்ஸ் தொடர் முடிவடைந்த பிறகு உலக செஸ் சம்மேளனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இந்திய செஸ் சம்மேளனத்தின் செயலாளரான தேவ் படேல் தெரிவித்திருந்தார்.மேலும், இந்த தொடரை நடத்த விருப்பமுள்ள நாடுகள் விண்ணப்பிக்கலாம் என்றும் உலக செஸ் சம்மேளனம் தெரிவிருந்த நிலையில் பல நாடுகளும் விண்ணப்பம் செய்து வருகின்றன.

இதை தொடர்ந்து இந்தியாவில் சென்னை, குஜராத், டெல்லி என 3 இடங்களில் இந்த தொடரை நடத்துவதற்கு இந்திய செஸ் கூட்டமைப்பு விருப்பம் தெரிவித்த நிலையில் தற்போது, தமிழக அரசு இந்த சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த வேண்டும் என்று நேரடியாக ஒரு விண்ணப்பம் அளித்து விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தொடரை சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசு சார்பிலும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வருகிற ஜூன் மாத இறுதியில் இந்த சாம்பியன்ஷிப் தொடர் எந்த நாட்டில் நடக்கும் என்ற இறுதி முடிவை பிடே கவுன்சில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story